
உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது..
பின் இரவு நேரங்களில் அது
பேயாட்டம் ஆடுகிறது..
ஆழ் மனதில் அடுக்கி வைத்திருக்கும்
உன் நினைவுகளை கலைத்து போடுகிறது..
உன் வாசனையை, அறை எங்கும்
நிரப்பி மாயாஜாலம் செய்கிறது..
காதல் வலியால் துடிப்பதை
குரூரமாய் பார்த்து சிரிக்கிறது..
பயந்த குழந்தையாய் போர்த்தி படுக்கையில்,
பக்கத்தில் படுத்து கட்டி கொள்கிறது உன் பிரிவும்.
கண்ணை மூடி தூங்க முனைகையில்,
காதல் கதைகளை உரக்க பேசுகிறது.
சிவந்த விழிகளோடு காலையில் பார்க்கையில்,
சாதுவாய் தூங்கி கொண்டிருக்கிறது அது.
அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என
அறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.
உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது...
No comments:
Post a Comment