
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்
உள்ளும் புறமும்
ஒன்றுகூடி ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றுகின்றன
இதுவே அவனுடனான
கடைசி சந்திப்பென..
அம்முடிவை கயிறாக்கி
மனதை சுற்றி இறுக்கிக்கட்டி
இருளில் இடம் பெயர்க்கிறேன்.
நித்தம் நிகழும் ஒவ்வொரு செயலும்
அவனையே நினைவூட்டும் போது
முட்டி மோதியும்
திமிறித் துடித்தும்
அலறி அழுதும்
முடிச்சுகள் அவிழாததால்
அமைதியாகிறேன்.
காலம் சில கடந்து
மீண்டும் மீண்டு வருகிறான்
முழு மதியாய் முகம் மலர்கிறான்
முடிச்சுகள் மூர்ச்சையிழந்து விடுகின்றன..
நலம் விசாரிக்கிறான்
முன் போல
அதிகாரம்
அரவணைப்பு
குற்றம்
குறை
கோபம்
கண்ணீர்
வெட்கம்
காதல்
கூடல்
என எதுவுமில்லாமல்
நட்பெனும் போர்வை போர்த்தி
கடந்தகாலம் கலக்காமல் கவனமாக
விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறான்...
மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவனுடனான
கடைசி சந்திப்பென...
No comments:
Post a Comment