
சட்டென்று தனிமை
ஆட்கொண்டுள்ளது
அல்லது
தனிமை நோக்கி நகர்ந்திருக்கிறேன்
இப்பொழுதெல்லாம்
அடிக்கடி கைப்பேசியை பார்க்க வேண்டியிருப்பதில்லை
மதிய உணவை சுலபமாக தவிர்க்கமுடிகிறது
அதிகாலையில் அமைதியாய் எழுகிறேன்
முந்தைய நாளில்
எவரோடு என்ன நிகழ்ந்திருக்கும்
என்ற கவலைகள் இருப்பதில்லை.
என்ன உடுத்தலாம்
என யோசிக்க வேண்டியிருப்பதில்லை
இக்கணத்தில்
என்ன செய்துகொண்டிருப்பானோவென
எக்கணமும் பூத்துக்கொண்டிருந்த
நினைவு மலர்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் காய்ந்து
உதிர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆயினும் அவன்
கொடுத்துப்போன ஏதேனும் ஒன்றை
பார்க்கநேரும் நொடியில்
சூல்கொண்டு
கனத்து இறங்கிக் கொண்டிருக்கும்
கண்ணீர்த் துளிக்குத் தெரியும்
இனியவன்
தன் குறுங்கூடுவிட்டு
பறந்து பாடலாம்
வான்வெளியெங்குமென.
No comments:
Post a Comment